தங்கத்தின் விலை ஏற்ற ,இறக்கத்துடன் இருந்த நிலையில் தற்போது பட்ஜெட்டில் வரியை அதிகரித்ததின்மூலம் இனி தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என தெரிகிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி எடுக்கக்கூடிய வட்டி விகித உயர்வு போன்ற முக்கியமான முடிவுகளைப் பொறுத்துதான் சர்வதேச தங்கத்தின் விலை நிர்ணயமாகும். இதைப் பொறுத்து இந்திய சந்தையில் தங்கத்தின் விலை நிர்ணயமாகும். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தங்கத்தின் விலை குறையும் என எதிர்ப்பார்த்த நிலையில், மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரியை அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இனி தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 616 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 60 ரூபாய் உயர்ந்து, ரூ.5,475-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ரூ.43,880-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,436-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 49 ரூபாய் உயர்ந்து, ரூ.4,485-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் 1096 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை..!! கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ரூ.1,096 அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.