அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி- மேட்டுப்பாளையம் – வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கோவை போலீசாரிடம் சிக்கிய நபர்- காவல்துறை அடையாள அட்டை, துப்பாக்கி, லத்தி ஆகியவை பறிமுதல்
கோவை மாவட்டம் ஈச்சனாரியை அடுத்த மாச்சேகவுண்டன் பாளையம் பகுதியில் தினேஷ் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடி வந்துள்ளார். அப்போது அவரது ஆதார் நகல் மற்றும் அவரது சகோதரர் வினு என்பவரின் போலீஸ் அடையாள அட்டை நகலை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தினேஷ் அங்குள்ள கோவிலுக்கு சென்ற போது, வினுவை சந்தித்துள்ளார். அவரிடம் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள் என தினேஷ் கேட்ட போது, தான் அமைச்சருக்கு பாதுகாப்பு பணியில் இருப்பதாக வினு தெரிவித்துள்ளார். அப்போது தினேஷ் உறவினர் அம்சவேனி என்பவரும் அந்த நிலையில் தான் அமைச்சருக்கு எஸ்கார்ட் பணியில் இருப்பதால் அரசு வேலை வாங்கி தருகிறேன். அதற்கு 2 லட்சம் ரூபாய் ஆகும் என கூறியிருக்கிறார். அதற்கு வீட்டில் பேசிவிட்டு தகவல் கொடுப்பதாக கூறி தினேஷும், அம்சவேனியும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி தினேஷ் அந்த வீட்டிற்கு சென்ற போது, வீட்டின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் இருந்த சில பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. அக்கம் பக்கத்தினரிடம் கேட்ட போது 3,4 தினங்களாகவே வீட்டிற்கு யாரும் வரவில்லையென தெரிவித்துள்ளனர். பிறகு தினேஷ் மாற்று சாவியை கொண்டு வீட்டை திறந்து பார்த்த போது வீட்டிற்குள் கைத்துப்பாக்கி, போலீசார் பயன்படுத்தும் தடிகள், மெட்டல் டிடெக்டர், தமிழ்நாடு போலீஸ் என அச்சிடப்பட்ட அடையாள அட்டை ஆகியவை இருந்துள்ளன.

வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்ததால் அதிர்ச்சியடைந்த தினேஷ், அனைத்து பொருட்களை எடுத்து கொண்டு சென்று மதுக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்த போது வினு மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஏற்கனவே அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கு விசாரணையில் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து வினு மற்றும் வீரபத்திரன் ஆகிய இருவரையும் தேடி வந்த போலீசார் வினுவை(34) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீரபத்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.