• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கைபேசிக்கான கையடக்க சூரிய ஒளி மின்னூட்ட கருவி கண்டுபிடிப்பு

Byவிஷா

May 18, 2024
கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது.
திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியர் சி.நாகமணியின் மேற்பார்வையில், பகுதி நேர முனைவர் பட்டம் பெற்ற சிடிஏசியின் மூத்த இயக்குநர் வி. சந்திரசேகர் கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவியை கண்டுபிடித்துள்ளார். அதனுடன் தெரு விளக்கு பயன்பாட்டுக்கான சூரியஒளி தகடு (சோலார் பேனல்), மின்சார வாகனங்களின் உபயோகத்துக்கான தீவிர மின்தேக்கி (அல்ட்ரா கேப்பாசிட்டர்) ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார். இதற்காக 3 காப்புரிமைகள் மற்றும் 3 பதிப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. மேலும் இதுகுறித்து 5 சர்வதேச இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை இலக்காகக் கொண்டு இக்கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றல் குறைக்கடத்தி சாதனங்களில் மேம்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி இந்த மின்னூட்ட கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெருவிளக்குகளுக்கான கையடக்க சூரியஒளி தகடு சிறியதாக இருந்தாலும், அதிக ஆற்றலுடன் தெருவிளக்குகளை எரிய வைக்கும். அல்ட்ரா கெப்பாசிட்டர், மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கும் போது, மின்சார வாகனங்களை திறம்பட இயங்க வைக்கும். இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர் வி. சந்திரசேகர் பேசுகையில், இவை விற்பனைக்கு வந்தால், சந்தை விலையை விட 50சதவிகிதம் குறைவாகக் கிடைக்கும் என தெரிவித்தார்.