• Fri. Apr 26th, 2024

6 மாதங்களாக மிரட்டி கூட்டு பலாத்காரம்…திமுக நிர்வாகிகள் உள்பட 8 பேர் கைது

விருதுநகரில் 22 வயது பெண்ணை பலாத்காரம் செய்த திமுக நிர்வாகி, பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகரை சேர்ந்த 22 வயது பெண் தனியார் ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மேலரத வீதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இது நாளடைவில் காதலாக மாறியது. அந்த பெண் ஹரிஹரனுடன் தனிமையில் சந்தித்து அவ்வப்போது உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை ஹரிஹரன், அந்த பெண்ணுக்கே தெரியாமல் வீடியோவாக எடுத்து வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மொன்னி தெருவை சேர்ந்த அவரது நண்பரும் திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேரும் அந்த வீடியோவை பார்த்து தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டனர். இதையடுத்து அகமது ஜீனைத் அந்த பெண்ணிடம் அந்த வீடியோவை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த 7 பேரும் அந்த பெண்ணிடம் ஆபாச வீடியோவை இன்டர்நெட்டில் பரவவிட்டுவிடுவதாக பயமுறுத்தியே அவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர்.
இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் எங்களது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இந்த வீடியோவை வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து விடுவோம். அது போல் இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னாலும் வீடியோவை ரிலீஸ் செய்வோம் என மிரட்டியுள்ளதாக தெரிகிறது.
இதனால் அந்த பெண்ணும் யாரிடமும் சொல்லாமல் இந்த 7 பேர் அழைக்கும் போதெல்லாம் சென்று வந்ததாக தெரிகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் இளைஞர்களின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாததால் டிரைவராக பணிபுரிந்து வரும் மாடசாமியிடம் நடந்த விவரத்தை சொல்லி தன்னை காப்பாற்றும்படி கேட்டுள்ளார்.
இதற்கு மாடசாமியும் பயப்படாமல் இருக்குமாறும் தான் அந்த பசங்களை மிரட்டி வீடியோவை டெலிட் செய்ய வைப்பதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் அந்த 7 பேரையும் சந்தித்த மாடசாமி அந்த வீடியோவை தனக்கும் அனுப்புமாறு கேட்டுள்ளார். மறுத்தால் பெண் விவகாரத்தை போலீஸில் சொல்லிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த இளைஞர்கள் மாடசாமியின் செல்போனுக்கு அந்த வீடியோவை அனுப்பியுள்ளனர்.
7 பேரிடம் இருந்து மாடசாமி தன்னை காப்பாற்றுவார் என நம்பிக்கையுடன் இருந்த அந்த பெண்ணுக்கு காத்திருந்தது மற்றொரு அதிர்ச்சி… “என்னுடனும் உல்லாசத்திற்கு வராவிட்டால், இந்த வீடியோவை உன் அம்மாவிடம் காட்டுவேன்” என மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் வேறு வழியில்லாமல் மாடசாமியின் பாலியல் அத்துமீறலையும் சந்தித்தார்.

கடந்த 6 மாதங்களாக அந்த வீடியோவை காட்டி மிரட்டிய 7 பேருடன் மாடசாமியும் சேர்ந்து கொண்டதால் புகாராக எழுதி வைத்து விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் திமுகவை சேர்ந்த இருவர், கூலித் தொழிலாளிகள் இருவர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியில் காதல் என்ற பெயரில் இளம்பெண்களை சிக்க வைத்து பின்னர் தனிமையில் அழைத்து சென்று அவர்களுடன் நெருக்கமாக இருப்பதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தில் அதிமுக நிர்வாகி ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது போன்றதொரு சம்பவம் விருதுநகரில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை வைத்து நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *