தமிழர்களால் மருத நிலத்தின் கடவுளாகவும், கிழக்கு திசையின் வேந்தனாகவும் போற்றப்படுபவர் இந்திரன். தேவர்களின் தலைவராக போற்றப்படும் இந்திரனை கொண்டாடும் விழாக்கள் பண்டைய காலத்தில் மிக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. வேளாண் நிலத்தில் அறுவடைக்கு உதவிய போகன் எனப்படும் இந்திரனை பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போக நாளன்று மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதை நினைவு கூறும் வகையில் நெல்லையில் முதன்முறையாக தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டு நடுவம் சார்பாக இந்திர விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கிருஷ்ணமூர்த்தி பட்டர் தலைமையில் 54 அந்தணர்களைக் கொண்டு மருத நிலங்கள் செழிக்கவும், மழை வேண்டியும், மக்களின் பசி, பிணி நீங்கவும் யாகம் நடத்தப் பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மாவட்டங்களைச் சார்ந்த ஊர் குடும்பர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு அகில இந்திய சந்நியாசி சங்க மாநில இணைச்செயலாளர் தவத்திரு ராகவானந்தா சுவாமிகள், குமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்தா மடம் தவத்திரு சைதானந்த மகாராஜ் சுவாமிகள் முன்னிலை வகித்தனர். கல்வியாளர் முனைவர் குணசேகர் அரிய முத்து தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் எம்எல்ஏ காந்தி, பாஜக கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கர், முன்னாள் தலைவர் மகாராசன், ஸ்ரீவை சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.