நான் இந்த ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. அதில் நான் தெளிவாக உள்ளேன். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து 252 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது. மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை 12 ஆண்டுகள் கழித்து இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதற்குக் காரணம், கடந்த டி20 உலக கோப்பையை இந்தியா அணி வென்ற பெற்ற பிறகு ரோஹித் சர்மா அந்த தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனது ஓய்வு குறித்து பரவிய வதந்திக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் இந்த ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. அதில் நான் தெளிவாக உள்ளேன். வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.