சர்வதேச நாணய நிதியம் துணை நிர்வாக இயக்குனராக இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்படவுள்ளார்.
இந்திய அமெரிக்கரான கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தார், இவருடைய பணிக் காலம் ஜனவரி 2022ல் முடிய உள்ள காரணத்தால் ஐபிஎம் அமைப்பில் இருந்து வெளியேறி மீண்டும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தனது பணியில் சேர உள்ளதாக அறிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியம் யாரும் எதிர்பார்க்காத ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
வாஷிங்டன்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகளுக்குப் பொருளாதாரச் சரிவில் இருக்கும் நிதியுதவி செய்யும் மிக முக்கியமான அமைப்பாக இருக்கும் காரணத்தால், இந்த அமைப்பின் உயர் அதிகாரிகள் அறிவிப்புகளும், முடிவுகளும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு மிகமுக்கியமானதாக உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகம் கொள்கை ஆகியவற்றைக் குறித்துப் பல முக்கியக் கருத்துக்களை அவ்வப்போது வெளியிடுவதன் மூலம் பலரின் கவனத்தைப் பெற்ற கீதா கோபிநாத் வெளியேறும் அறிவிப்புச் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஐஎம்எப் அமைப்புக் கீதா கோபிநாத்-ஐ முதல் துணை நிர்வாகத் தலைவராக நியமிக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதிவியல் இருந்த Geoffrey Okamoto வெளியேறும் காரணத்தால் தற்போது கீதா கோபிநாத் இப்பதவியில் அமர்த்தப்பட்டு உள்ளார். முதல் துணை நிர்வாகத் தலைவர் என்பது ஐபிஎம் அமைப்பில் டாப் 2வது பதவி.
தற்போது, அந்த அமைப்பின் துணை நிர்வாக இயக்குனராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா செயல்பட்டு வரும் நிலையில் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணை நிர்வாக இயக்குனர் ஆகிய இரு உயர் பதவிகளிலும் பெண்கள் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






