ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
எட்டு நாட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று முன்தினம் தொடங்கியது. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்தும் நடப்பு சாம்பியனான பாகிஸ்தானும் மோதின. இதில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி நேற்று இரவு துபாயில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. டாஸை வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹசனும் சௌமியா சர்காரும் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இந்தியாவின் வேகப்புயல் முகமது ஷமி தனது 6வது பந்தில் சர்காரின் விக்கெட்டை வீழ்த்தி வங்கதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹுசைனும் 2பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஹர்ஷித் ராணாவின் பந்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து ஷமியின் பந்தில் 5 ரன்களை மட்டுமே எடுத்து மிராஜ் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 9 ஓவர்களின் முடிவில் 40-க்கும் குறைவாக ரன்களை மட்டுமே எடுத்து 5 விக்கெட்களைப் பறிகொடுத்தது. இதனால் மிக எளிதில் வங்கதேச அணி சுருளும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்து களமிறங்கிய தவ்ஹீத் ஹிர்தாய் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் சதம் விளாசி அசத்தினார். ஜாகேர் அலியும் அவரது பங்கிற்கு 68ரன்கள் எடுத்து அணிக்கு பக்கபலம் சேர்த்தார். இறுதியாக 49.4 ஓவரில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 228ரன்கள் எடுத்தது. 229ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கேப்டன் ரோஹித் 41ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் 11 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் 11 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கில்லுடம் ஜோடி சேர்ந்த விராட் கோலி 22 ரன்களுக்கும், ஸ்ரேயஷ் ஐயர் 15ரன்களுக்கும், அக்சர் படேல் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால், சுப்மன் கில் விக்கெட் விழாத வகையில் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடினார். அவருடன் கே.எல்.ராகுல் இணைந்து இருவரும் ரன் எண்ணிக்கையை அதிகரித்தனர். இறுதியாக இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 46. 3ஓவர்களில் வங்க தேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் விளாசிய சுப்மன் கில் 101ரன்களுடனும் , கே.எல்.ராகுல் 41ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணியில் முகமது ஷமி வங்கதேச அணியின் 5விக்கெட்களைச் சரித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்களை வீழ்த்தி முகமது ஷமி சாதனை படைத்தார். இதேபோல ஹர்ஷித் ராணா 3 விக்கெட்களும் அக்சர் படேல் அடுத்தடுத்து 2 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர். முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ளது.