விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையத்துக்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப் பட்டது .
அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேரூந்துகள் இந்த நிழற்குடையில்நிறுத்தி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நிழல்குடையில் பேருந்துகள் வர முடியாமல் ஆக்கிரமிப்புக்கள், நடைபாதை கடைகள் இருந்ததால், நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாமல் இருந்தது. நிழற்குடையில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆக்கிரமிப்புக்களை அகற்றி பயணியர் நிழற்குடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார். இதையடுத்து, காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலையில் ஆக்கிரமிப்புக்கள், நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அருப்புக் கோட்டை மார்க்கமாக செல்லும் பேரூந்துகள் பயணியர் நிழற்குடை அருகே நிறுத்தி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு பிறகு பயணியர் நிழற்குடை கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்த காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே. செந்திலுக்கு, பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.