• Mon. Apr 29th, 2024

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வீரவிளையாட்டுக்கு என தனி மைதானம்.., மதுரையில் அமைச்சர்கள் பேட்டி..!

ByKalamegam Viswanathan

Jan 9, 2024
இந்தியாவிலேயே வீர விளையாட்டுக்கு  என, தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் தான்: அமைச்சர்கள் ஏ.வ. வேலு, பி. மூர்த்தி ஆகியோர் பேட்டி அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பளவில் 44 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கலையரங்க கட்டுமான பணி தொடங்கப்பட்டது. கடந்த 10 மாத காலத்திற்குள் இந்த கட்டுமான பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு தற்போது திறப்பு விழா காணப்பட உள்ளது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு கலையரங்க மைதானத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்து, மேற்பார்வையிட்டு, ஆலோசனை மேற்கொண்டனர். 
அப்போது, செய்தியாளர்களிடம் ஏ.வ .வேலு கூறியதாவது..,
தமிழ்நாடு மக்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் வண்ணமாகவும் அதை பெருமைப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் வீர விளையாட்டுக்கென்று தனி கலையரங்க மைதானத்தை கட்டுவதற்கு அனுமதி அளித்தார். இதற்கான அறிவிப்பானை 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டது. அதன் பின்பு கடந்த 10 மாத காலத்திற்குள் துரிதமாக மைதான பணிகள் கட்டப்பட்டு தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. 
இந்திய அளவில் வீர விளையாட்டுக்கு என, தமிழ்நாட்டில் மட்டும்தான். அதுவும் குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் தென்பகுதி மக்களின் பெருமையை பாரம்பரியத்தை வீர விளையாட்டை நினைவு கூறும் விதமாக இந்த ஜல்லிக்கட்டு கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு சுற்றுலா துறை நிதியின் மூலம் சுமார் 44 கோடி மதிப்பில் இந்த கலையரங்க கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த கலையரங்கத்திற்கு வரக்கூடிய பாதைகள் 28 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்பட்டு தனியான தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கலையரங்கத்தில் ஜல்லிக்கட்டை நேரில் கண்டு களிக்கும் விதமாக 5000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்ட கேலரி, விஐபிகள், விவிஐபிகள், தங்குவதற்கும் அமர்வதற்கும் அறைகள் மற்றும் பார்வையாளர் மாடம், அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகள் வரிசைப்படுத்துவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் வசதியான இடம். வீரர்கள் உடை மாற்றவும் ஓய்வு எடுக்கவும் தனி அறைகள், காயம் பட்ட வீரர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க மருத்துவ மையம், கால்நடைகளை முதலுதவி சிகிச்சை செய்வதற்கும் தனி கால்நடை மருத்துவ மையம், வெளிநாட்டு பார்வையாளர்கள் மற்றும் விழாவை காண வரக்கூடிய பார்வையாளர்களுக்கு ஓய்வறைகள். பத்திரிகையாளர்களுக்கு தனி ஓய்வரை என்று தனித்தனியே பிரம்மாண்டமான முறையில் ஜல்லிக்கட்டு கலையரங்க மைதானம் கட்டப்பட்டுள்ளது. கலையரங்கத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பெயர் சூட்டப்பட உள்ளது.
அதேபோல், ஜல்லிக்கட்டு என்றாலே பல்வேறு தடைகளை நீக்க நீதிமன்றத்தில் தொடர் வழக்குகள் மூலம் அவற்றுக்கு நிரந்தர தீர்வு கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு ஐந்து பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு ஜல்லிக்கட்டுக்கு இனிமேல் தடையே இல்லை என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வருவதற்கு தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருமான மு. க. ஸ்டாலின். எனவே, அவ்வாறு வழங்கப்பட்ட இந்த தீர்ப்புக்கு நினைவுச் சின்னமாக தான் தற்போது கட்டப்பட்டுள்ள கலையரங்க மைதானம் திகழ்கிறது. ஜல்லிக்கட்டு மைதானம் குறித்தும் மைதானத்திற்கு வைக்கக்கூடிய பெயர் போன்றவை குறித்தும் எதிர்க்கட்சிகளும் ஊடகவியலாளர்களும் பேசும் சர்ச்சை பேச்சு இயல்பான ஒன்றுதான். ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது உண்டு அந்த சுதந்திரத்திற்கு நாம் யாரும் தடை போட முடியாது. எனவே, தந்நிகரில்லா தலைவராக விளங்கிய கலைஞர், பெயரை சூட்டுவதில் பெரும்பான் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியே தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *