• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Jun 18, 2024

நற்றிணைப்பாடல்: 383

கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை
அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,
உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள் அருளினை போலினும், அருளாய் அன்றே
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு,
ஓங்கு வரை நாட! நீ வருதலானே.

பாடியவர்: கோளியூர்கிழார் மகனார் செழியனார். திணை:

பொருள்:

உயர்ந்த மலை நாடனே! நீ எம் தலைமகள் பால் மிக்க அருளுடையை போலுகின்றனை யாயினும்; மலையின் தாள்வரையிலே தழைந்த கரிய அடியையுடைய வேங்கை மலராலே தொடுக்கப்பட்ட அசைதலையுடைய மாலைபோன்ற குட்டிகளை; அணித்தாக ஈன்ற வயாநோய் பொருந்திய கரிய பெண்புலி பசியுழந்ததாக; அதனை அறிந்த வலிய ஆண்புலி புள்ளிகளையுடைய முகம் பிளவுபடுமாறு மோதிக் களிற்றியானையைக் கொன்று; இடியினுங் காட்டில் மேலாக முழங்காநிற்கும் அச்சமிக்க நடுயாமத்திலே; செறிந்த இருளான் மூடப்பட்ட கருதினார்க்கு நடுக்கம் வருகின்ற நெறியின்கண்ணே; பாம்பின்மீது சினந்து விழுந்து கொல்லுகின்ற இடி இடிக்கும் பொழுது நீ எங்களை நினைத்து வருதலானே; அருளுடையை அல்லை காண்!