நற்றிணைப்பாடல் 360: முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய விழவு ஒழி களத்த பாவை போல, நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி, இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர், சென்றீ - பெரும! - சிறக்க, நின் பரத்தை! பல்லோர் பழித்தல் நாணி, வல்லே காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப, கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும் முனியுடைக் கவளம் போல, நனி பெரிது உற்ற நின் விழுமம் உவப்பென் மற்றும் கூடும், மனை மடி துயிலே.
பாடியவர்: ஓரம்போகியார்
திணை : மருதம்
பொருள்:
பெருமானே! பலரும் இகழ்ந்து கூறுதல் பொறாது வெள்கி விரைவாக; வருந்திய பாகர் இருப்பு முள்ளாலே குத்தி அலைத்தலாலே; துன்புற்றுத் தன் துதிக்கையிடை வைத்ததனை மெய்யின்மேல் வாரி இறைத்துக் கொள்ளுகின்ற யானைக்கன்றுக்கு இட்ட கவளம்போல; மிகப் பெரிதாக நீ யுற்ற நின் சீர்மையை யான் கண்டு மகிழா நிற்பேன்; நீ மனையின்கண் வந்து துயிலுகின்ற துயிலானது பிறிதொரு பொழுதினுங் கூடும்; ஆதலால் மத்தள முகத்து வைத்த மார்ச்சனை வறந்து போமாறு முறையே கூத்துக்களை ஆடிய; திருவிழா வொழிந்த களத்திலுள்ள கூத்தியைப்போல; அழகுடைய நேற்றைப் பொழுதிலே வந்து நின்னை முயங்கிய பரத்தையருடைய புதிய நலனை யெல்லாங் கொள்ளை கொண்டு; இற்றை நாளால் பாணனாலே கொணர்ந்து தரப்படுகின்ற பரத்தையருடைய மெல்லிய தோளை அணையும் வண்ணம்; விரைந்து செல்வாயாக! நின்னொடு நின் பரத்தை நீடு வாழ்வாளாக!