நற்றிணைப் பாடல் 296:
என் ஆவதுகொல்? தோழி! மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப,
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதக மலரும், 5
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப, காதலர்:
ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே.
பாடியவர் : குதிரைத் தறியனார்
திணை : பாலை
பொருள்:
“எல்லாரும்தானே பிரிந்து செல்கிறார்கள்” என்கிறார் காதலர். “பிரிந்தால் மாண்டுபோவேன்” என்கிறேன் நான். நிலைமை என்ன ஆகும்? தோழி, நீதான் சொல்லேன், என்கிறாள் தலைவி. மன்னரின் போர்த்திறம் மிக்க யானையின் முகத்தில் பொன்னால் செய்த ஓடை இருப்பது போல, உள்ளே துளை உடைய காயுடன் பூத்திருக்கும் கொன்றைப் பூ, கொடி படர்ந்திருக்கும் பெரிய பாறைமீது (ஏ கல்) மோதுமாறு மலர்ந்திருக்கும் காட்டுவழியில் பிரிந்து சென்றவர் வருந்தும் இளவேனில் காலத்து, மற்றவர்களைப் போல நானும் பொருளீட்டும் வினையே பெரிதென்று எண்ணும் உள்ளத்தோடு செல்லவிருக்கிறேன் என்கிறார் காதலர். சென்றால் வருந்தி வருந்தி செத்தொழிந்து போவேன் என்கிறேன் நான்.
இனி நிலைமை என்ன ஆகும்?