நற்றிணைப் பாடல் 275:
செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தென, பூவே
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு
யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து,
அறனிலாளன் புகழ, எற்
பெறினும், வல்லேன்மன் – தோழி! – யானே.
பாடியவர் : அம்மூவனார்
திணை : நெய்தல்
பொருள் :
தோழீ! சிவந்த நெற்கதிரை யறுக்கும் மள்ளர் தம் கூரிய அரிவாளினாலே புண்படக் காணாராகக் கதிர்த்தூரொடும் போந்ததனாலே; அம்மலர் அரிவாளொடும் கதிரொடும் கலந்தனவாகிய அரிக்கிடையிலே படுக்கையாகக் கிடந்து; தான் உற்ற துன்பத்தை ஆராயாமல்; மெல்ல மெல்லக் கொடிய ஆதித்தனைக் காண்டலும் இனிய துயிலிடத்துப் பசிய வாயைத் திறவாநிற்கும் பேதைமையுற்ற நெய்தன்மிக்க பெரிய கடற்கரைத் தலைவனுக்காக; யான் படுகின்ற துன்பத்தையும் கடந்து அவனை நினைந்து இரக்கம் உறுவேன் அல்லேன் ஆதலால், அவனை வெறுத்தேனுமல்லேன்; யான் அவ்வறனிலாளன் தன்னை அயலார் புகழும்படி என்னை மீட்டும் பெறுவதாயினும் அதற்கும் இயைகின்றேன்; அங்ஙனம் வெறாது விடப்பட்டதனால் அதுவும் இல்லையாயிற்று;