• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Oct 13, 2023

நற்றிணைப் பாடல் 271:

இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய,
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச்
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர் வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று,
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன,
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்,
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, மா இருந் தாழி கவிப்ப,
தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே.

பாடியவர் : ஆசிரியர் அறியப்படவில்லை
திணை : பாலை

பொருள் :

அணித்தாக ஈனப்பட்ட கரிய எருமையின் பெரிய செவியையுடைய கன்று; பசிய மலரில் உள்ள பராகங்கள் உதிர்ந்து எருவாகக் கிடத்தலையுடைய தொழுவத்திடத்துத் தங்கப்பெற்ற துயிலை மேற்கொண்டு செழுமையுடைய குளிர்ச்சியுற்ற மாளிகையுடனே; எம்மை இங்கே ஒழியவிட்டுத் தன்னுடனே வருகின்ற பெரிய காளையாவான் கூறும் அளவு கடந்த பொய்ம் மொழியாலே மயங்கி; நெடுந்தூரத்திலுள்ள அவனது நாட்டை அடைய விரும்பி இளமரஞ் செறிந்த சுவையையுடைய நெல்லியஞ் சோலையில்; உதிர்ந்த கடையிலே திரண்ட காயை ஒருசேரத்தின்று; வறந்த சுனையில் உள்ள மிகச் சிலவாகிய நீரைப்பருகி; சென்றுவிட்ட நெய்தன் மலர்போன்ற மையுண்ட கண்ணையுடைய என் மகளை; ஒருதன்மையாகிய சிவந்த பனங்குருத்தைக் கீண்டு பதனிடுமாறு போடுதலாய மாலைப்பொழுதில்; விரிந்த நிலவிலே சென்று பின்னே போய்க் காணும்படியாக விட்ட இதற்கு; முன்னாலேயே என்னைப் பெரிய தாழியிலிட்டுக் கவிக்கும்படி என் உயிரைக் கொண்டுபோகாத கூற்றமானது; தான் வலியழிந்து தன்னை அந்தத் தாழியிலிட்டுக் கவிக்கும்படி இறந்தொழியக் கடவதாக!