• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Oct 12, 2023

நற்றிணைப் பாடல் 270:

தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,
உருள் பொறி போல எம் முனை வருதல்,
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் பெருந் தோட் செல்வத்து இவளினும் – எல்லா!
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே; மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே.

பாடியவர் : பரணர்
திணை : நெய்தல்

பொருள் :

ஏட! நீ பிரிந்தக்கால் பெரிய தூற்றினையுடைய தாழைப் புதலினாலே கட்டப்பட்ட எமது சிறிய வீட்டின்கண்ணே! நோனாத் தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து இருள் புரை கூந்தல் பொறுக்க முடியாதபடி சோலையிலுள்ள புன்னை முதலாகியவற்றின் மலரை முடித்தலால் வண்டுகள் மொய்க்கின்ற நறுநாற்றத்தையுடைய இருளொத்த கூந்தலில்; மிக்க துகள்படிய நிலத்திலே புரண்டு சாய்ந்தாற் போலாக எம்முன்னே வருந்துதலையுடையளாகி அழகழிந்த தன்மை யொன்றல்லாது; நின்னை வசமாக்குதலைத் தெரியாத பெரிய தோளையுடைய செல்வமகளாகிய இவளினுங்காட்டில்; என்னைப் பெரிதும் நீ அன்பு செய்தொழுகா நின்றனை அங்ஙனமாயினும் நீ பிரிந்து சென்றதானது; அழகு பொருந்திய விரிந்த பிடரிமயிர் பொலிவுபெற்ற விரைந்த செலவினையுடைய நல்ல குதிரைப் படைகளையுடைய பகையரசராகிய பிண்டன் முதலாயினோரைப் போரிலே தோற்றோடச் செய்த ஏந்திய வேற்படையையுடைய நன்னன்; தான் அப் பகையரசரின் உரிமை மகளிரைப் பற்றி வந்து அவர் தலையை மழித்து அக் கூந்தலைக் கயிறாகத் திரித்து அக் கயிற்றாலே அப் பகைவரின் யானையைப் பிணித்த கொடுமையினும் கொடியதாயிராநின்றது; ஆதலால் நினது வலிய தகுதிப்பாட்டினை யான் மறந்தே விடுகின்றேன்காண்.