• Sat. May 11th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 8, 2023

நற்றிணைப் பாடல் 226:

மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர் – நன்னுதல்!
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.

பாடியவர் : கணி புன்குன்றனார்
திணை: பாலை

பொருள்:

அழகிய நுதலையுடையாய்! இவ்வுலகத்து மாந்தர் மரம் பட்டுப்போகும்படி அதன்பாலுள்ள மருந்தை முற்றுங் கொள்வார் அல்லர்; மற்றும் தம் வலிமை முற்றும் கெடுமாறு உயர்ந்த தவத்தைச் செய்யார்; அரசர் தம்முடைய குடிகளின் செல்வமெல்லாம் குறைபடும் வண்ணம் அவரிடத்து இறை வாங்குபவரல்லர்; அவற்றை உணர்ந்துவைத்தும் தாம் வருத்தம் மேற்கொண்டு வெயில் நிலைகொள்ள நீண்ட சுரத்துநெறி பின்னே ஒழிய எம்மைப் பிரிந்து சென்றவராகிய நங்காதலர்; தாம் எம்மைப் பிரியாதுறைதலின் நாம் உயிரோடிராநின்றோம்; தாம் ஈட்ட விரும்பும் பொருள் காரணமாக எம்மைப் பிரிவராயின் அதனாலே வருவது எமது இறந்துபாடு என்பதனைத் திண்ணமாக அறிந்தவரல்லர்; எக்காலத்தும் இதுவே ஆடவர் இயற்கை என்பர் சான்றோர்; இதனை யாவரும் அறிந்திருப்பர் கண்டாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *