• Sat. Apr 27th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Jul 9, 2023

நற்றிணைப் பாடல் 202:

புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப்

பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ, காண்வர,
கண்டிசின்- வாழியோ, குறுமகள்!- நுந்தை,
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போல,

பல் பூங் கோங்கம் அணிந்த காடே.

பாடியவர்: பாலை பாடிய பெருங் கடுங்கோ
திணை: பாலை

பொருள்:

இளமடந்தையே! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; புலியொடு போர் செய்தலாலே இரத்தந் தோய்ந்து சிவந்த புலவு நாற்றத்தையுடைய செவ்விய மருப்பின் அடியிலே தழைத்த பலவாய முத்துகள் ஒலியாநிற்ப; வலிமிக்கு வலிய மேட்டு நிலத்தின்கணுள்ள வேங்கை மரத்தின் பருத்த அடியை முறித்து; தன் கன்றுடனே இளம்பிடியை அணைத்த நீண்ட கையையுடைய களிற்றியானை; தேனைத் தொகுக்கின்ற ஈக்களெல்லாம் ஓடுமாறு அவ் வேங்கையின் பொன் போன்ற பூங்கொத்தாலாகிய உணவைப் பாதுகாத்து நின்று ஊட்டா நிற்கும்; கரிய மலைப் பிளப்பிடங்களைச் சூழ்ந்து அழகுமிக; கார்த்திகை நாளின் பெயராலே பெற்ற அறஞ் செய்தற்குரிய திங்களின் எடுக்கப்பட்ட விசும்பிலே செல்லுகின்ற ஒளியையுடைய நீண்ட விளக்கங்களின் வரிசைபோல; பல பூக்கள் நிரம்பிய கோங்கங்கள் அழகு செய்யப்பட்ட நின் தந்தைக்குரிய இக் காட்டினை நீ காண்பாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *