• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நற்றிணைப் பாடல் 185:

Byவிஷா

Jun 13, 2023

ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி
காமம் கைம்மிக கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின் பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நல் மான்
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி
இரவலர் மெலியாது ஏறும் பொறையன்
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேனுடை நெடு வரை தெய்வம் எழுதிய
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே

திணை: குறிஞ்சி

பொருள்:

தலைவி மீது தீராத காதலோடு உடலும் உள்ளமும் அழிந்து கலங்குகிறேன். என்னுடைய அன்பு எல்லை கடந்து நிற்கும் துயரத்தில் உதவுவார் இன்றிக் கிடக்கிறேன். இதனைப் பார்த்துக்கொண்டு அவளை எனக்கு உதவாமல் இருக்கிறாய். அவள் கொல்லிப்பாவை போன்று என்னைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறாள். என்ன செய்வேன் என்று சொல்லிக்கொண்டு தலைவன் கலங்குகிறான்.
தன் பாங்கன் உதவ வேண்டும் என்றோ, தலைவியின் தோழி உதவ வேண்டும் என்றோ தலைவன் மன்றாடுவதாக இதனை வைத்துக்கொள்ளலாம்.