கார் மீது வீசப்பட்ட காலணி பாதுகாப்பாக உள்ளது என்றும், உரியவர் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார்.
காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர்.இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதுக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.அவர்களுக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி பின்னர் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கட்சி நிர்வாகிகளுடன் அந்த பெண் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், காலனியை திரும்பப் பெற விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம், எனது ஊழியர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள் என பதிவிட்டுள்ளார்.