காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் முன்னணி தலைவரான சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.பியான தீபிந்தர் சிங் ஹ_டா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது..,
”ஜி-20 உச்சி மாநாட்டுக்கு ரூ.4,100 கோடி, பிரதமரின் விமானத்துக்கு ரூ.4,800 கோடி, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட ரூ.20 ஆயிரம் கோடி, விளம்பரங்களுக்காக ரூ.6,500 கோடியை அரசு செலவிடுகிறது. ஆனால், பணத்தை மிச்சப்படுத்துவதாக கூறி, ராணுவ ஆள்சேர்ப்பு செயல்முறையில் குழப்பத்தை ஏற்படுத்துவது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவாலை ஏற்படுத்தும்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய நடைமுறையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெறும்” என்று தெரிவித்தனர்.
மேலும் இதேபோல், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்னிபத் திட்டத்தால் ராணுவத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இளைஞர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.