• Mon. Apr 29th, 2024

சொந்தக் கட்சியினராலேயே முதுகில் குத்தப்பட்டேன்..,
உத்தவ்தாக்கரே ஆதங்கம்..!

Byவிஷா

Jun 25, 2022

மகாராஷ்டிராவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட சிவசேனா கட்சிக்கு என்றும் இல்லாத அளவிற்கு பெரிய சவால் எழுந்துள்ளது. கட்சியே இருக்குமா? இருக்காதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக, முக்கிய மூத்த தலைவரராக, அமைச்சராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு எதிராக போர்க் கொடி தூக்கி இருப்பதுதான் இதற்குக் காரணம்.
இன்று இந்த சிக்கலை எதிர்கொள்ள, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்குவதற்கு தேசிய செயல்வீரர்கள் கூட்டத்தை உத்தவ் கூட்டியுள்ளார். இன்று மதியம் ஒரு மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காணொளி வாயிலாக கலந்து கொள்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் உத்தவ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசியல் நெருக்கடியை தொடர்ந்து, அரசு வீட்டை குடும்பத்துடன் காலி செய்து தனது சொந்த வீட்டில் குடியேறினார்.
சிவசேனா கட்சியில் மொத்தம் 55 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்து இருந்தது. தற்போது கூட்டணி கட்சிகளால் அந்தக் கட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை சொந்தக் கட்சியில் இருப்பவர்களால் சிக்கல் எழுந்துள்ளது.
இதைத்தான் நேற்று உத்தவும் குறிப்பிட்டு பேசி இருந்தார். கூட்டணி கட்சிகள் என் முதுகில் குத்தவில்லை. கட்சியில் இருந்தவர்கள்தான் என் புறமுதுகில் குத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார். ஏக்நாத் ஷிண்டேவின் செயலை கடுமையாக கண்டித்து இருந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்,
‘மாநிலத்தில் தெருக்களில் இறங்கி சிவ சேனா கட்சியினர் போராட்டம் நடத்தினால் வேறுமாதிரி இருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த செயலுக்கு பின்னணியில் பாஜக இருக்கிறது என்று உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவுத் இருவரும் குற்றம்சாட்டி இருந்தனர். கட்சியில் தனது மகன் ஆதித்ய தாக்கரேவின் வளர்ச்சி ஏக்நாத் ஷிண்டேவுக்குப் பிடிக்கவில்லை என்றும் உத்தவ் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ‘பாஜக பக்கம் இருப்பவர்களை கேள்வி கேட்க வேண்டும். சிவசேனா முடிந்து விடவில்லை. செல்பவர்கள் செல்லட்டும். என்னால், புதிதாக கட்சியை கட்டமைக்க முடியும். இந்துத்துவா வாக்குகளை பகிர்ந்து கொள்ள பாஜக விரும்பவில்லை. இந்துத்துவா வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காகத் தான் எனது தந்தை பால் தாக்கரே பாஜகவுன் கூட்டணி வைத்து இருந்தார். கொள்கைகளில் இருந்து என்றும் நாங்கள் விலகியதில்லை” என்றும் உத்தவ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் இன்று தேசிய செயல் வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தை உத்தவின் மகனும், அமைச்சருமான ஆதித்ய தாக்கரே முன்னின்று நடத்துகிறார். அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்று இருக்கும் 16 எம்.எல்.ஏக்களுக்கு சிவ சேனா கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இவர்களை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்று சட்டசபை துணை சபாநாயகருக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது. ஆனால், அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த புதன் கிழமை நடந்த கட்சிக் கூட்டத்திலும் இவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்.
”தனக்கு 50க்கும் அதிகமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் கூறியுள்ளார். இவர்களில் 40 பேர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். கட்சி தலைமையை தொடர்பு கொள்ள முயற்சித்தால், அனுமதி கிடைப்பதில்லை. இந்த நிலையில்தான் எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர் என்றும் ஏக்நாத் நேற்று கருத்து தெரிவித்து, அதற்கான ஆதாரமாக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். தற்போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகருக்கு வெளியே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *