தமிழ்த் திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் 19-ம் தேதி உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
பிறகு டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அவருடைய மகன் சிம்பு அதற்கான ஏற்பாடுகளை கவனித்தார். டி.ராஜேந்தருக்கு முன்பு அமெரிக்கா சென்ற சிம்பு, அங்கு தந்தைக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதையடுத்து, குடும்பத்தினருடன் டி ராஜேந்தர் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், தான் நலமுடன் திரும்பி வருவதாக நம்பிக்கையுடன் கூறினார். இந்நிலையில், அமெரிக்கா மருத்துவமனையில் டி.ராஜேந்தர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் டி.ராஜேந்தர் குணம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சிகிச்சைகளை முழுமையாக முடித்துக் கொண்டு டி. ராஜேந்தர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.