தொடர் விடுமுறை காரணமாக ஏற்காடு, ஒக்கனேக்கல் போன்ற சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகள் தங்கள் விடுமுறை தினத்தை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இன்று ஜனவரி 1, 2024 உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தொடர் விடுமுறை காரணமாக பலரும் சுற்றுலாத் தலங்களில் குவிந்துள்ளனர். அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானல் ஏற்காட்டில் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் புத்தாண்டை கொண்டாட வருகை தந்துள்ளனர்.
இங்கு ஏரி, படகு இல்லம், மான்பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, சேர்வராயன் கோயில், பக்கோடா பாயின்ட் என முக்கிய இடங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. இங்கு கோடை விடுமுறை நாட்களில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சமீபகாலமாக மிக அதிகமாக காணப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 23ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை . நேற்று ஞாயிறு, இன்று ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்றுள்ளனர். ஏற்காட்டில் நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் தள்ளுவண்டி கடைகளில் பலகாரங்கள் விற்பனைகளும் ஜோராக நடைபெற்று வருகிறது. இடைப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி கரை, விசைப்படகில் உல்லாச சவாரி செய்து புத்தாண்டை அமர்க்களமாக கொண்டாடி வருகின்றனர்.