• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

ஆடம்பரங்களைத் தவிர்த்து மக்களுக்கு உதவுங்கள் தொண்டர்களுக்கு கட்டளையிட்ட உதயநிதி..

Byவிஷா

Nov 26, 2021

வடகிழக்குப் பருவ மழையின் தீவிரத்தால் மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில், மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்புகளை சரி செய்வதிலும் கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற ஆடம்பரங்களை அறவே தவிர்க்கவேண்டும். இதுபோன்ற ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளுக்குப் பயன்படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், வடகிழக்குப் பருவமழை பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதிலும், மக்களை சந்தித்து குறைகளை கேட்பதிலும், அதிகாரிகளுக்கு உடனுக்குடன் ஆலோசனை கூறுவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்பட்டு வருவதை கண்டு நாடே பாராட்டுகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழியில் அமைச்சர் பெருமக்களும், மாவட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், இளைஞரணி தம்பிமார்களும் களப்பணியாற்றி வருவதே அறிவேன்.


கொரோனா பெருந்தொற்று, கனமழை என தொடர் பாதிப்புகளிலிருந்து கழக அரசின் உதவியுடன் மக்கள் மீண்டு வரும் சூழலில் என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவும் வகையில் இருக்க வேண்டுமே தவிர அவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கவே கூடாது. எனவே பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ் பேனர்கள் வைப்பது போன்ற ஆடம்பரங்களில் அறவே தவிர்க்க வேண்டும்.

இது போன்ற ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளை பயன்படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படி மக்களுக்கு பயனுள்ள வகையில் எனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அமையுமானால் அதைவிட மகிழ்ச்சி தருவது எனக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது.


வடகிழக்குப் பருவ மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதிலும் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்புகளை சரி செய்வதிலும் கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனது பிறந்தநாளில் என்னை வாழ்த்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.