வருகிற ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, எல்.ஐ.சி உள்பட அனைத்து பொதுத்துறை வங்கிளுக்கும் அரைநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் இந்தியாவின் அனைத்து பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிதி நிறுவனங்கள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்ஐசி அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலும் இருந்து ஆன்மிகவாதிகள், அரசியல்வாதிகள், பிரபலங்களுடன் மோடியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விழாவையொட்டி, ஜனவரி 22ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மக்களின் நம்பிக்கை உணர்வுகளைக் கருத்தில் கொண்டு அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது..,
“அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை விழா இந்தியா முழுவதும் 22 ஜனவரி 2024ல் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தக் கொண்டாட்டங்களில் உற்சாகமாக ஊழியர்கள் கலந்து கொள்ளும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஜனவரி 22, 2024 அன்று 2.30 மணி வரை மூடப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ உத்தரவு அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் ஃ துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.