

தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. அதுமட்டுமின்றி, பணி நிறைவுக்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2022ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த முறை பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டது. இதனால், ஏராளமான அரசு ஊழியர்கள் பயன் பெற்றனர்.இந்நிலையில், அரசு ஊழியர்களின் திருமணமாகாத பெண்கள், விதவை, விவாகரத்தான பெண்கள், விதவை மகள் ஆகியோர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் வழங்க பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு, அரசு ஊழியர்களின் திருமணமாகாத பெண்கள், விதவை, விவாகரத்தான பெண்கள், விதவை மகள் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் பயனடையும் வகையில் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது என முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், மேற்கண்ட வகையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பயன் அடைவர் என்று அரசு தெரிவித்துள்ளது.
