தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகாரில் கூகுள் நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாக அபராதம்
கூகுள் நிறுவனம், தனது கூகுள் பிளே ஸ்டோரில், செயலி உருவாக்கிய நிறுவனங்களிடம் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதாவது, பிளே ஸ்டோரில் பிரதான இடத்தில் இடம்பெற வேண்டுமானால், கூளுள் பிளே பில்லிங் முறையைத்தான், பண பரிமாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று கெடுபிடி செய்ததாக கூறப்பட்டது. இந்திய போட்டி ஆணையம் அந்த புகாரை விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936 கோடியே 44 லட்சம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டது. மேலும், நியாயமற்ற வர்த்தக செயல்பாடுகளை தவிர்க்குமாறு கூறியுள்ளது. ஆன்ட்ராய்டு மொபைல்போனில் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான மற்றொரு புகாரில், கடந்த 20-ந் தேதி கூகுளுக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.1,337 கோடி அபராதம் விதித்து இருந்தது. ஒரு வாரத்துக்குள் 2-வது முறையாக நேற்று அபராதம் விதித்துள்ளது.