அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், உசிலம்பட்டி, செக்காணூரணி போக்குவரத்து பணிமனையிலிருந்து 75 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் உள்ள 94 பேருந்துகளில் தினசரி 68 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் காலை 5 மணி முதல் 7 மணி வரை சுமார் 42 பேருந்துகள் தொ.மு.ச தொழிற்சங்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களால் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் செக்காணூரணி போக்குவரத்து பணிமனையில் உள்ள 48 பேருந்துகளில் தினசரி 40 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் 7 மணி வரை சுமார் 33 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அதிகாலை உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு மற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து பேருந்துகளை எடுத்து செல்ல வந்த ஓட்டுநர், நடத்துனர்களிடம் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் மற்ற தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளை எடுத்து செல்ல வைத்தனர்.