• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் புதிய காற்றழுத்த
தாழ்வுப் பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகக்கூடும் என்றும், இது புயலாக வலுப்பெற வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. முதலில் மழைப்பொழிவு எதிர்பார்த்த அளவில் இருந்தாலும், பின்னர் ஏமாற்றத்தையே கொடுத்தது. நவம்பர் மாதம் முதல் மற்றும் 2-வது வாரத்தில் முதல் மற்றும் 2-வது மழைப் பொழிவு அதிகளவில் பதிவானது. இதில் 2-வது மழைப் பொழிவில் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டியது. அதிகபட்சமாக சீர்காழியில் ஒரே நாளில் 43 செ.மீ. மழை பெய்தது. இது 120 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத மழைப் பதிவாக பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதத்தின் 3-வது வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தமிழகத்தில் 3-வது மழைப்பொழிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது பொய்த்து போனது. வறண்ட காற்று, அதனை கடல் பகுதியில் இருந்து நிலப் பகுதிக்குள் விடாமல் தடுத்து நிறுத்தியது. இதனால் எதிர்பார்த்த மழை கிடைக்காததோடு, அந்த தாழ்வு மண்டலம், தமிழக கடற்கரைப் பகுதி வழியாக ஆந்திர கடலோர பகுதியில் வலுவிழந்தது.
அதன் பின்னர், தமிழகத்தில் மழைக்கான சூழல் குறைந்து காணப்பட்டது. சுமார் 10 நாட்களுக்கு மேலாக பெரிய அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை. இருப்பினும், தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இந்நிலையில் ஏற்கனவே கணித்திருந்தபடி, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரும் எதிர்பார்ப்பாக இந்த மாதத்தில் மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல், தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (திங்கட்கிழமை) உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் (அதாவது 7-ந்தேதி இரவு), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும், வருகிற 8-ந்தேதியன்று தமிழகத்தின் வட மாவட்டங்கள்- புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவும், குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.