கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனம் மீது மோதிய கோர விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கரூர், செம்மடை அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி இறங்கியதில் எதிரில் வந்த சுற்றுலா வாகனத்தில் (வேன்) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

அதிகாலை 5 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து, அப்பகுதியினர் அளித்த தகவலின் பெயரில், கரூர் தீயணைப்பு நிலைய மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாங்கல் போலீசார் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் 14 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து மோதி விபத்து ஏற்படுத்தியதில், கோவில்பட்டியில் இருந்து ஏற்காடு சுற்றுலா செல்ல இருந்த சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்தவர்கள் என இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
14 பேர் அரசு மருத்துவமனையிலும், மேலும் சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. சிலர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.




