திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (28). கூலி வேலை செய்பவர். இவரது மனைவி தீபாவுக்கு நேற்று காலை 11.38 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து வந்த தகவலையடுத்து, 108 ஆம்புலன்ஸ் தாழவேடு பகுதிக்கு விரைந்து, தீபாவை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தது. அப்போது தீபா பிரசவ வலியால் துடித்ததால், மருத்துவ உதவியாளர் ரவிகுமார் சாதுர்யமாக செயல்பட்டு ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்தார்.
இதைத் தொடர்ந்து, மதியம் 12:25 மணிக்கு, திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி ஏரிக்கரை அருகே ஆம்புலன்ஸிலேயே தீபாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, குழந்தையும், தாயும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர். ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் ரவிகுமார், ஓட்டுநர் ரகு ஆகியோரை மருத்துவர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.