• Thu. May 2nd, 2024

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி பேட்டி…

BySeenu

Mar 16, 2024

18ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை வரும் பிரதமர் மோடியின் பேரணியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரருமான கிராந்தி குமார் பாடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேர்தல் கண்காணிப்பு பணி நடத்தப்படும் என்றார். இதில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் ஜிபிஎஸ் உடன் இணைக்கப்பட்டு கோவை மாவட்ட தேர்தல் கண்காணிப்பறையிலும், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகம், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திலும் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரும் கட்சியினர், ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அனுமதி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரம் தன்னடத்தை விதிகளின்படி அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் ஆன்லைன் சமூக ஊடகங்களும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றார். வரும் 18ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை வரும் பாரத பிரதமர் மோடிக்கு, தேர்தல் நடத்தை விதிகள் பொருந்துமா என்ற கேள்விக்கு, பிரதமருக்கு உண்டான இசட் ப்ளஸ் பாதுகாப்பு, எஸ்பிஜி மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்புடன் நன்னடத்தை விதிகளின்படி அனுமதி உள்ளது என தெரிவித்தார்.

வயதானவர்கள், உடல் ஊனமுற்றோர்க்கு இந்த தேர்தலில் வாக்களிக்கும் விதமாக அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று வாக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் தேர்தல் விதிமுறைகளில் முறைகேடுகள் நடைபெற்றால் அதனை பொதுமக்கள் புகாராக பதிவு செய்ய செயலி உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கோவை மாநகர் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும், அங்கே கூடுதல் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *