மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, வெள்ள நிவாரண நிதியை வழங்குவது குறித்து, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணித் தொடங்கியது.
இந்நிலையில், வெள்ள நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வங்கி கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்று கோரியும் ரொக்கம் பணத்தை அதிகரிக்க கோரியும் மோகன்தாஸ், செல்வக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று (டிச.15) தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வெள்ள நிவாரணம் உடனடி தேவை. அதை தாமதப்படுத்த முடியாது. வெள்ள நிவாரணம் ரூ.6000- ஐ ரொக்கமாக வழங்கலாம். வெள்ள நிவாரணம் தகுதியானவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். நிதியை தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. நிவாரணம் வழங்கியது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது ” என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை (டிச.17) முதல் வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.