
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தஆண்டு வைகாசி விசாக திருவிழா இன்று பழனி பெரியநாயகிஅம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாள் நடைபெறும் திருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளிதெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் வைபோகநிகழ்ச்சி வருகிற ஜூன் எட்டாம் தேதி நடைபெறும்.

அதனை தொடர்ந்து ஜூன் ஒன்பதாம் தேதி வைகாசி விசாக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறும். இதில், அலங்கரிக்கப்பட்ட திருதேரில் எழுந்தருளிய வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் கொடிக்கு பன்னீர், சந்தனம்,விபூதி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.இந்நிகழ்வில் இணை ஆணையர் மாரிமுத்து ,அறங்காவலர் குழுவினர் ,உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
