




புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தப்படும் படகுகள் வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை நடுக்குப்பம் கடற்கரை ஓரம் நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், பெரிய கோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைக்கும் அந்த இடத்தை இடுகடாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் நடுக்குப்பம் மீனவ கிராமத்திற்கும்,பெரிய கோட்டகுப்பம் கிராமத்திற்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, இரு தரப்பிற்க்கும் பிரச்சனைகள் இருந்து வருகிறது.
இது சம்பந்தமாக கோட்டகுப்பம் நகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பலமுறை இருதரப்பினரும் மனு கொடுத்தும், இவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை.
இந்த நிலையில் நடுக்குப்பம் மீனவ கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம், நடுக்குப்பம் கடற்கரையில் நடைபெற்றது. இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்தாரும் கலந்து கொண்டு, மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைக்கும், இடங்களையும், சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீனவர்கள்….
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது படகுகளை தாங்கள் கடவுளாக தான் மதிக்கிறோம், அந்த படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை நிறுத்தி வைக்கும் இடத்தில், பெரிய கோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இடுகடாக பயன்படுத்தி இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர். மேலும் சடலத்தை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்களை தங்களின் படகுகள் மீது வீசி செல்வதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைக்கும் கடற்கரை பகுதியில் பெரிய கோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சடலங்களை அடக்கம் செய்ய கூடாது, என வலியுறுத்தினர்.
தொடர்ந்து இந்த கோரிக்கை முன்வைப்பதாகவும் ஆனால் நகராட்சியும் காவல் துறையும் இதில் அலட்சியமாக செயல்படுவதால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

