திருவண்ணாமலையில் பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதியாக 23 வயதேயான ஸ்ரீபதி என்பவர் தேர்வாகி இருப்பது பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடி கிராமமான புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி (23). ஏலகிரி மலையில் கல்வி கற்று, அதன் பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு இருந்தார். இடையில் அவருக்கு திருமணமான போதும், படிப்பைக் கைவிடாமல் தொடர்ந்து பட்டப்படிப்பை படித்து முடித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்க முடிவு செய்து, அதற்காக தீவிரமாக படித்து வந்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, ஆறுமாத கால பயிற்சிக்கு பின் நீதிபதி ஆகிறார். ஜவ்வாது மலையில் இருந்து பழங்குடிப் பெண் ஒருவர், முதல்முறையாக நீதிபதி ஆகி இருக்கிறார். தமிழ் வழியில் பயின்றோருக்கான ஒதுக்கீட்டின் பயனாளி அவர். தடைகள் பல கடந்து அவர் அடைந்துள்ள வெற்றிப் பயணத்திற்கு அரசியல் டுடே சார்பில் வாழ்த்துக்கள்.