விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சரும், ஒரிசா மாநில ஆளுநரும், காந்தி கலைமன்ற நிறுவனமான பி. எஸ். குமாரசாமி ராஜாவின் 128–ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பி.எஸ்.கே நகரில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் பி.ஏ.சி ராமசாமி ராஜா இசைப் பள்ளி குழுவின் கீர்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவரது நினைவிடத்தில் ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர் வெங்கட்ராமராஜா, அவரது மனைவி பி.வி நிர்மலா ராஜூ,
காந்திகலைமன்ற அறங்காவலர் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா மலர் தூய் மரியாதை செலுத்தினர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜ்மோகன், நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். சங்கர் கணேஷ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நகரின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாலையில் காந்தி கலைமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பி. எஸ். கே. ருக்மணி அம்மாள் கலையரங்கத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு காந்தி கலைமன்ற அறங்காவலர் என்.கே. ஸ்ரீகண்டன்ராஜா தலைமை வகித்தார். முன்னதாக காந்தி கலைமன்ற அறங்காவலர் பி.ஜே.ராம்குமார் ராஜா வரவேற்றார்.

பின்னர் எம்.எஸ். ஷண்முகப்பிரியாவின் தேச–தெய்வ சிந்தனை கீர்த்தனைகளுடன் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பிறந்தநாளை முன்னிட்டு காலையில் ராஜபாளையம் ஜவகர் மைதானம், திருவனந்தபுரம் தெரு, காந்தி சிலை ரவுண்டானா அருகே உள்ள பி. எஸ். கே. சிலை, நகராட்சி அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைகளுக்கு பொதுமக்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள்,அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.





