விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வ.புதுப்பட்டி கிராமம் அருகில் இன்று (30-10-2023) மாலை வத்திராயிருப்பிலிருந்து வ.புதுப்பட்டி கிராமத்திற்கு அர்ச்சுனாபுரம் கிராமம் வழியாக மாதவாராயன்குளம் கண்மாய் அருகில் சென்று கொண்டிருந்த சிற்றுந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள தென்னந்தோப்பில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் நந்தகுமார், தஃபெ.இருளப்பன் மற்றும் பாண்டி (எ) தேவேந்திரன் தஃபெ. சின்னப்பராஜ் ஆகிய இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.