மதுரையில் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை புது ஜெயில் ரோடு பகுதியில் உரிய அங்கீகாரம் இன்றி வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக முதலமைச்சர் தனி பிரிவிற்கு புகார் அளிக்கப்பட்டது.
புகார் குறித்து விசாரணை நடத்த மருத்துவத்துறை இணை இயக்குனர் செல்வராஜ் தலைமையில் மதுரை மாநகர சுகாதார அலுவலர் வினோத் மற்றும் மருந்துகள் ஆய்வாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து உரிய அங்கீகாரம் இன்றி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த ராஜசேகர் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தனியார் மருத்துவமனையில் அறுவை ஆய்வு கூடத்தில் பணியாற்றி வருவதாகவும், அதனால் அக்கம் பக்கத்தினருக்கு மருத்துவம் பார்த்துள்ளார் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவரது வீட்டை சோதனையிட்ட மருத்துவ குழுவினர் அவரது வீட்டில் இருந்து ஏராளமான மருந்து குப்பிகள், மாத்திரைகள், சிரஞ்சுகள் கைப்பற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து ராஜசேகரை கரிமேடு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலி மருத்துவர் ராஜசேகரை கரிமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.