• Sat. Apr 27th, 2024

தேர்தல்கள் முடிந்தன…இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது- கமல்ஹாசன் ட்வீட்..

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றி அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதேபோல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி நிர்ணயித்து வருகின்றன.அந்தவகையில் நேற்று 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று 2வது நாளாக மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது. அதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.102.58 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 77 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 92.65 காசுகளுக்கு விற்பனையாகிறது. சமையல் கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் காரணமாகவே பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்ததாகவும், தற்போது தேர்தல் முடிந்ததும் மீண்டும் விலையேற்றத்தை தொடங்கிவிட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே.” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *