மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகவதியம்மன் கோவில் தெருவில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஊராட்சி செயலாளர் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடத்தில் பலமுறை புகார் அளித்தோம் கண்டுகொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதுடன், வேறு பகுதிகளுக்குச் சென்று குடிநீர் பிடித்து வரும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். குடிநீர் மட்டுமின்றி தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோர் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் இல்லாமல் ஒரு குடம் ரூபாய் 15 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்துவதாகவும், காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இது குறித்து கோரிக்கை வைத்தும் ஊராட்சி செயலாளர் மற்றும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கண்டுகொள்ளவில்லை என கூறும் பொதுமக்கள் விரைவில் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்கப் போவதாகவும் கூறியுள்ளனர் மேலும் இரும்பாடி ஊராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் குடிநீர் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை வாடிப்பட்டிவட்டார வளர்ச்சி அலுவலர் செய்து தர அறிவுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




