சிவகாசி மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டவும், கூடுதல் அலுவலர்களை நியமிக்கவும் கோரி புதிய உறுப்பினர்களை சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
சிவகாசியில், திமுக கட்சியில் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாநகர திமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, சிவகாசி மாநகராட்சி பகுதியில் திமுக கட்சிக்கு புதியதாக 30 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இப்போதிருந்தே துவங்க வேண்டும். திமுக அரசு செய்துள்ள மற்றும் செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பேசினார். பின்னர் கூட்டத்தில், வரும் செப்டம்பர் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்க இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், மாவட்டங்கள் தோறும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க உத்தரவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் பூங்கா அமைப்பதற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், சிவகாசி மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களுக்கும்.
தனித்தனியாக புதிய அலுவலகங்கள் கட்டவும், அலுவலகங்களில் கூடுதல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில வர்த்தக அணி துணை தலைவர் வனராஜா, தலைமை கழக மேலிட பொறுப்பாளர் மதுரை பாலா, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், அதிவீரன்பட்டி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், திருத்தங்கல் முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் பொன்சக்திவேல், சிவகாசி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் குருசாமி, சேவுகன், மாநகர பகுதி கழக செயலாளர் காளிராஜன், மாரீஸ்வரன், மாநகர திமுக கவுன்சிலர்கள் வெயில்ராஜ், ஞானசேகரன், சேதுராமன், திருப்பதி, மாநகர பொருளாளர் சீனிவாசபெருமாள், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.