• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திமுக அரசு ரூ.4000 கோடிக்கு அல்ல.. ரூ.4 கோடிக்கு கூட வடிகால்கள் அமைக்கவில்லை.., அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ குற்றச்சாட்டு..!

Byவிஷா

Dec 5, 2023

விடியா திமுக அரசு ரூ.4000 கோடி அல்ல, ரூ.4 கோடிக்கு கூட மழைநீர் வடிகால்கள் அமைக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி துணைச் செயலாளர் முத்துப்பாண்டி ஏற்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.வழங்கினார். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டின், கே.ஜெயவேலு, கவுன்சிலர் ஏ.மாயத்தேவன், சுப்பையா, டி.எம்.குமார், வடிவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது-
சென்னையில் மழை நீர் வடிவதற்கு 4 கோடி ரூபாயில் கூட மழைநீர் வடிகால் அமைக்கவில்லை. 4000 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிவதற்கு வடிகால் அமைக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியிருந்தது, தி.மு.க. தலைமையிலான அரசு பேச்சோடு சரி, எந்த ஒரு செயல்பாடுகளும் செய்யவில்லை. தி.மு.க. அரசு புயல் முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்து மக்களுக்கு திருப்திகரமாக இல்லை. தி.மு.க. உண்மையான சுயமரியாதை இயக்கமாக செயல்படவில்லை. தி.மு.க.வினர் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்கள்.
அதே நேரத்தில் தங்களை சுயமரியாதைக்காரர்கள் என காட்டிக்கொண்டு சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிறார்கள். நடிகர் விஜயகாந்த் உடல்நலம் தேறி வர வேண்டுமென அன்னை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறேன். சினிமாவில் எம்.ஜி.ஆர். போலவே விஜயகாந்தும் தாங்கள் உண்ணும் உணவைத்தான் சக ஊழியர்களுக்கும் வழங்குவார்கள். சினிமாவிலும் அரசியலிலும் விஜயகாந்த் கரை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.