மதுரை மாநகராட்சி மண்டலம் -5 -ல் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் பெயர் இல்லை என கூறி மதுரை துணை மேயர் நாகராஜன் கல்வெட்டு முன்பு வெயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 5-ல் இன்று மேயர் துணை மேயர் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்து மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பங்கு பெற்ற நிலையில் மதுரை துணை மேயர் மாநகராட்சி கட்டிட கல்வெட்டில் பெயர் இல்லை என கூறி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகராஜன் பங்கு பெறாமல் புறக்கணித்தார்.இதனை தொடர்ந்து மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் முடிந்தவுடன் மாநகராட்சிக்கு வந்த மதுரை துணை மேயர் நாகராஜன் கல்வெட்டு முன்பு அமர்ந்து கல்வெட்டில் பெயர் சேர்க்க வேண்டும் என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து துணை மேயர் நாகராஜன் கூறுகையில் இதுபோன்ற பல்வேறு இடங்களில் எனது பெயரை புறக்கணித்து வருவதாகவும் நானாக என் சொந்த செலவில் கல்வெட்டு அடித்து கொடுத்தும் அதனை வைப்பதற்கு அதிகாரிகள் முன்வரவில்லை எனவும் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் வரை தர்ணா போராட்டத்தை கைவிடப்போவதில்லை என கூறினார்.