சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் இன்று மாலை, 4.45 மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 நிமிடங்கள் தாமதமாக, இன்று மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறது. பிரதமா் விமான நிலைய வரவேற்பை முடித்துவிட்டு, உடனடியாக தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். சென்னை விமான நிலையத்தில்,பிரதமா் 25 நிமிடங்கள் ஓய்வு எடுப்பதாக இருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் தாமதத்துக்கு காரணம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, பிரதமரின் தனி விமானம் தாமதமாக புறப்பட்டதால், விமானம் தாமதமாக சென்னைக்கு வருகிறது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.