• Fri. Apr 26th, 2024

ஸ்ரீ.வி அருகே நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்.., காவல்துறை விசாரணை..!

Byவிஷா

Jan 19, 2022

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி – கான்சாபுரம் விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதியாக இருப்பதால், இந்தச் சாலையில் நாள்தோறும் சுமார் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் புதுப்பட்டி கான்சாபுரம் செல்லும் சாலையில் உள்ள அர்ச்சுனாபுரம் பெரிய ஓடை பகுதியில் இருந்து மூலக்காடு செல்லும் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகம்படும் படியாக நின்று கொண்டிருந்த நிலையில், அவர்கள் அருகில் பை இருப்பது தெரியவந்தது. வனத் துறையினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது சாலையோரத்தில் உள்ள ஓடை பகுதியில் முட்புதருக்குள் இரு பைகளில் 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அந்த சாலையை யாரும் பயன்படுத்தாமல் இருக்க காவல் துறை மூலம் கயிறுகள் கட்டப்பட்டது. மேலும் வெப்பம் காரணமாக வெடிகுண்டுகள் எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்து விடும் என்ற காரணத்தினால் உடனடியாக பள்ளம் தோண்டப்பட்டு அதனுள் வைக்கபட்டது.

தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புஷ்பராஜ், ராம்குமார், சின்னச்சாமி ஆகிய 3 பேரை பிடித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் அதிகம் பயணிக்கும் இந்த சாலையில் கிடைக்கப் பெற்ற நாட்டு வெடிகுண்டுகளால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *