சென்னை போத்தீஸ் கடை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அரசின் சுகாதாரத் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பதும் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் பணிபுரியும் 240 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில், 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலால் கடை மூடப்பட்டது.
நேற்று (7ம் தேதி), சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் சுமார் 250 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்தக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.