காரைக்காலில் வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள பாஜக அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார்.காரைக்கால் நகராட்சியின் புதிய சந்தைத் திடலில் நடைபெற உள்ள மாநாட்டில் மத்தியமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.
இதையொட்டி முன்னேற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.சந்தை திடலில் மாநாட்டு மேடை அமைப்பதற்கான பணி பந்தக்கால் முகூர்த்தத்துடன் இன்று தொடங்கியது.பாஜக புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா,புதுச்சேரி சபாநாயகர் செல்வம்,பாஜக மாநில செய்தி தொடர்பாளர் அருள்முருகன், பாஜக மாவட்ட தலைவர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் முருகதாஸ் தலைமையில் சந்தை திடல் பகுதியில் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியதாவது: கடந்த 10தினங்களுக்கு முன்பு மத்தியமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் முழுமையான வெற்றி பெறுவதற்கான முன்னோட்டமாக இந்த அரசியல் மாநாடு அமையும் என்றார்.தேர்தலில் முக்கிய வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிர்மல் குமார் சுரானா,புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் கடந்த 5ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அறிவித்த மக்கள் நலதிட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளதால் மக்கள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் எனவும்,காரைக்கால்மாவட்டத்தில் இம்முறை 5தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.