மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவின் போது அதிமுக கட்சி பெயரையோ, கொடி, லெட்டர் பேடுகளை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த செய்தியை அறிந்து, கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., சாமானியர்களின் இயக்கமாக அதிமுக அரை நூற்றாண்டுகள் கடந்து ஏறத்தாழ 31 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்தது.
ஒட்டுமொத்த ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவை பெற்று கழகத்தின் பொதுச் செயலாளராக எடப்பாடியார் தேர்வு செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் வரை சென்று சத்தியத்தை நியாத்தின் படி நின்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.
அதன்படி மக்களிடத்தில் குளப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் கழகத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்துவது குறித்து எங்களால் தொடரப்பட்ட வழக்கில் இன்று வரலாற்று தீர்ப்பாக, எட்டுக்கோடி மக்களிடத்தில் குளப்பத்தை தீர்க்கும் வகையிலும், ஊடக பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கிடைத்துள்ளது.
நாளையே தேர்தல் வந்தாலும் மீண்டும் முதல்வராக வரக்கூடிய மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள எடப்பாடியார் தலைமையில் தான் அதிமுக, இனி இரண்டரை கோடி உண்மை தொண்டர்களுக்கு அண்ணா உருவம் பொருந்திய கொடி, கட்சி அலுவலகம், லெட்டர்பேடு உள்ளிட்ட அனைத்துமே சொந்தம் இதை யாரும், துரோகிகளோ எதிரிகளோ பயன்படுத்த முடியாது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கிடைத்ததை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியுள்ளோம்.
புதிய நம்பிக்கை தரக்கூடிய செய்தி, மீண்டும் எடப்பாடியார் முதல்வராக வருவதற்கு வலிமை சேர்க்கும் வகையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இனி துரோகிகளுக்கு இந்த இயக்கத்தில் இடமில்லை, அவர்களுக்கு எதுவும் சொந்தமில்லை என்ற தீர்ப்பு வரவேற்க தக்கது நீதியரசர்கள் நியாத்தின் பக்கம் சத்தியத்தின் பக்கம் தீர்ப்பு வழங்கியுள்ளனர் அவர்களுக்கு நன்றியை மக்களின் சார்பில், தொண்டர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என பேட்டியளித்தார்.